#kavidhai

அம்மாவின் சாம்பார் பொடி – ஓர் கவிதை

P.C: Canva

இத்தோடு ஈரேழு முறை 
சொல்லிக் கொடுத்து விட்டாள்—
 சாம்பார் பொடி வீட்டிலேயே செய்யும் முறை 
மனம் கேட்கவில்லை
ஒருவேளை சோம்பேறித்தனமோ? 
இருக்கலாம்!

பல தடவை பக்கத்து கடைக்கும் 
போய் வந்தாகிவிட்டது 
சாம்பார் பொடி பாக்கெட்டில் இருந்தும் 
 வாங்க மறுத்தது மனம்...

அம்மா தொலைபேசியில் உறுதி அளித்தாள் —
'கவலைப்படாதே நான் சொல்லும்படி செய்தால் 
என் கை மணம் அதில் வரும்'
  இருந்தும் ஏற்க மனமில்லை

மனதின் எதோ ஒரு மூலையிலிருந்து வரும் 
 அந்த ஏக்கமே அறியும் 
ஏறிக்கொண்டிருக்கும் அம்மாவின் வயதை 
ஏற்க மனமில்லாமல் 
கடத்திக்கொண்டு  பொத்திவைக்க பார்க்கிறேன் 
அவள் அரைத்து அனுப்பும் சாம்பார் பொடியையும் 
அவள் ஆயுளையும் —
 என் சமையலறை டப்பாவில்...


Written as part of #BlogchatterFoodFest.


இறுதி ஊர்வலம்-தமிழ் கவிதை

இறுதி ஊர்வலம்

மத்திய உணவுக்கான நேரம்
எதிர்பாராத அளவில் கூட்டம்
வாசலில்- ஒரு சவம்
அதை தூக்கிச் சுமந்தபடி
பல கைகள் 

பட்டு வண்ண பட்டாம்பூச்சியை
சுமந்தபடி
பல கட்டெறும்புகள்! 

உன் இறுதி ஊர்வலத்தில்
உன்னைச் சுமக்கப் போவது யார்?

மேலும் படித்து ரசிக்க:

எங்கு எழுகிறது காதல்- ஓர் கவிதை

PC: Designed by the Author using Canva

எங்கு எழுகிறது காதல்?

புல்  நுனி பனித்துளிகள் படும் 
பட்டு பாதங்களிலா ?

தொட்டும் தொடாமலும் 
பட்டும் படாமலும் 
தென்றல் முத்தமிட்டுச்செல்லும் 
மலர் மேனியிலா ?

கார்மேகமும் கதிரவனும் ஆடும் 
கண்ணாம்பூச்சி  ஆட்டத்தை 
காணும் கண்களிலா ?

ருதுவான அன்பின் மொழி 
அமைதியின்  அரவணைப்பில் 
ரீங்காரமாய் ஒலிக்கும் செவிகளிலா ?

முத்தமிட்டு ஒப்பந்தம் செய்த 
விண்ணுக்கும் -மண்ணுக்குமான 
காதலை மண்வாசனையில் 
நுகரும் நாசிகளிலா ?

உன்னோடு உறவாடும் வேளையில் 
நேசக்கடல் நீர்வீழ்ச்சியாய் எழும் 
நெஞ்ச குழியிலா? 

தென்றலிலா?
தொடுதலிலா ?

காற்றிலா?
காரணத்திலா ?

உறவிலா?
ஊடலிலா ?

மயக்கத்திலா ?
மதியிலா ?

மௌனத்திலா?
மரணத்திலா ?

உன்னிலா?
 என்னிலா?

எங்கு எழுகிறது காதல்?
தெரிந்தால் எனக்குச் சொல் 

எங்கிருந்து எழுகிறதோ 
கட்டுக்கடங்காத காதல் 
அங்கேயே  நான் 
உடன் கட்டை ஏறிவிடுவேன் 

எங்கு எழுகிறது காதல்?
தெரிந்தால் எனக்குச் சொல்!

வீடுகடத்தினேன் – ஓர் கவிதை

 
PC: Designed by the Author
வாசலில் வரவேற்கும் 
பளீர் சிரிப்புடன் 
மங்களகரமான மஞ்சளில் 
கொன்னை பூங்கொத்துக்கள் 

சுண்ணாம்பு பூசப்பட்டு 
காவியில் கோலம் போட்ட 
மூன்றடி உயர
சிறிய துளசி மாடம் 

பகலின் அயர்ச்சியை 
இரவில் கலைத்தபடி 
ஆசுவாசமாக அமர்ந்த 
கடப்பா கல் திண்ணை 

திருடன் வந்தால் துரத்திவிடக்கூடிய 
முறைப்பு பார்வையோடு 
ஜன்னல் கம்பியில் 
திருஷ்டி கணபதி படம் 

காற்றின் தாலாட்டில் 
அசைந்து ஆடியபடி 
மாவிலை தோரணம் 

நம்மை நமக்கே காட்டியபடி 
எட்டி நின்று வரவேற்கும் 
முகம் பார்க்கும் கண்ணாடி 

பளீர் ஆரஞ்சு நிறத்தில் 
ப்ளை வுட் வாங்கி 
தாத்தா பார்த்து பார்த்து 
தச்சனிடம் செஞ்சு வாங்கிய 
இருக்கை  மேஜைகள் 

யார் வருவார் என்று ஏங்கி கொண்டு 
காத்திருப்பது போல் 
எந்நேரமும் விளையாட தயாராயிருக்கும் 
அகலமான ஒற்றை ஊஞ்சல் 

பஞ்சு மெத்தையே இருந்தபோதும் 
போட்டி போட்டு கொண்டு 
இடம் பிடிக்கும் 
தாத்தாவின் சாய்வு நாற்காலி

சாதுவாய் நின்றிருக்கும் 
எந்நேரமும் சாயக்கூடிய 
மர அலமாரி 

யார் வந்தாலும் அரவணைத்து 
தாய் மடி துயில் போல் 
ஆனந்தம் அளிக்கும் 
இரும்பு கட்டில் 

எந்த பெட்டியில் 
எந்த பொக்கிஷங்களிருக்கும் 
என்று அறியாமல் 
மாயமாய் மறைத்திருக்கும் 
பரண்(ம்)பொருள்

கடவுளிடம் அனுமதி கேட்டு 
உள்ளே நுழைய தோதுவாய் 
மணிகள் மாட்டிய 
பூஜையறை கதவு 

பழையதே  ஆனாலும் 
புதிதுபோல் பளிச்சிடும் 
அடுக்களையில் அடிக்கியிருக்கும் 
எவர்சில்வர் ஹார்லிக்ஸ் பாட்டில்கள் 

கருவேப்பிலை பறிக்க 
தோதாய் இருக்கும் 
கதவில் தொங்கும் தாத்தா கம்பு 

சில்லென்று காற்றுவீசும் 
துவைக்கிற கல் கொண்ட 
அமைதியான கிணற்றடி 

குயிலும் காகமும் 
அமரும் மா மாமரம் 

நித்தமும் பூக்கும்   
நித்தியமல்லியும் 
இரவில் மலரும் 
 பவழமல்லியும்

தேரையை தன் மடிப்பில் 
மறைத்திருக்கும் 
இளம் வாழைகளும் 

அடிக்கு அடி 
 முளைத்து நிற்கும் 
கருவேப்பிலை கன்றுகளும் 

நீர் பாய்ச்சும் வேகத்திலேயே 
வெகுண்டெழும் 
மண்வாசனையும் 

வீட்டை சொர்கமாக்கும் 
செல்ல சொந்தங்களும் 

அத்தனையையும் 
பக்குவமாக பிணைத்து 
வீடுகடத்தினேன் 
என் நினைவுகளில் 

மணம் முடித்து 
புகுந்த வீட்டிற்கு 
புறப்படும்போது 

பௌர்ணமி பாரம்

ஓர் காதல் கவிதை





A woman gazing full moon
PC: Designed by the Author using Canva & DALL.E 2
பறந்தவெளியிலிருந்து  அவனும் 
இருண்ட தாழ்வாரத்திலிருந்து இவளும் 
ஒருத்தரை ஒருத்தர் நோக்கியவாறு 
தனிமையை தொலைக்கிறார்கள் 

தொலைவிலிருந்து கண்டவாறு 
காத்திருக்கிறேன் நான் 
துணையாக ஒருநாள் என்னை 
தேர்ந்தெடுப்பாள்  என்றெண்ணி 

சில்லென்று ஒரு காதல்

கடலின் ஆழம் கற்றறிந்தேன் 
உன் மௌனத்தில் 
நீந்தி எழுகையில் 

முத்தும், முத்தங்களும் பொக்கிஷங்கள்  

உன் ஈரக் கசிவுகளில் 
இழைந்தோடுகிறது 
என் இதய ராகம் 

மழை முத்தமிட்ட இலைகள் 
காகிதப்  பூவும் 
மலர்ந்தன -உன் 
காதலின் கதகதப்பில் 

என் புத்தகத்தில் உன் பெயர்
மேலும் படிக்க:

ஹைக்கூ கவிதைகள்-தொகுப்பு 1

© Promising Poetry

வெவேறு தருணங்களில் எழுதிய ஹைக்கூ கவிதைகள் உங்கள் பார்வைக்காக. இதில் உங்களுக்கு எது பிடித்தது என்று ‘கமெண்ட்ஸில்’ சொல்லவும்.

ஹைக்கூ

இரு தனி வரிகளாய் இருந்த அவளும் அவனும்  
இணைந்து- ஒரே பொருள் தரும் 
குழந்தையாய்-ஓர் கவிதை! 

உறவு

உயிர்களை இணைத்து, பின்
பிரிவினால் பிணமாக்கும்,
 பாசக்கயிறு !

மின் விசிறி

தலைகீழாய் தொங்கி
நடனமாடும் 
கழைக்கூத்தாடி!

தினசரி காலேண்டர்

பிறருக்கு பலனை சொல்லும் அவளுக்கு,
ஏனோ தெரியவில்லை,
 தனக்கு விதித்தது மரணம் என்று...